(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தன் கால் பட்ட இடமெல்லாம் சன்மார்க்க ஒளி பாய்ச்சி வாழ்ந்த மாபெரும் ஈமான் தாரியை, ஆன்மீக வாதியை சமுதாயம் இழந்து விட்டது. ஷைகுல் பலாஹ் அல்லாமா அல் உஸ்தாத் எம். ஏ. அப்துல்லாஹ் ரஹ்மானி ஹஸரத்தின் மறைவு இந்நாட்டு முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழுநாட்டுக்கும் ஏற்பட்ட, எளிதில் நிரப்ப முடியாத இழப்பாகும் என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ. எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஷைகுல் பலாஹ் அவர்களை நாள் 50ஆண்டு காலத்துக்கு மேலிருந்து அறிவேன். எனது மாமனார் மஹகரகமையைச் சேர்ந்த ஏ. எல். செய்னுலாப்தீன் (தீன்பாஸ் மாமா) மத்ரஸதுல் பலாஹ் கட்டிட நிர்மாணத்திற்கு அப்போது பொறுப்பாக இருந்தார். அவருடன் நாம் காத்தான்குடி சென்று வரும் போதெல்லாம் இந்த மகானைச் சந்திப்பதில் தவறுவதில்லை.
எமது இன்னொரு மாமனாராகிய முஹம்மது சாலி மாமா என்பவர் இந்தக் கட்டிடப்பணிகளில் ஈடுபட்டிருந்த போது காலஞ்சென்று காத்தான்குடியிலே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை இன்று நான் நினைத்துப் பார்க்கிறேன்.
அன்று காத்தான்குடியின் பட்டிண சபைத் தலைவராக இருந்த முஹம்மது காசிம் தலைமையில் கட்டிட நிர்வாகக் குழு இயங்கிய பொழுது ஷைகுல் பலாஹ் அடிக்கடி எனது மாமனாரைச் சந்திப்பதற்கு மஹரகமை வந்து செல்வது வழக்கம். அவருடைய அருமைத் தந்தையார் அபூபக்கர் ஆலிம் மஹரகமை கபூரியா மத்ரஸா விரிவுரையாளராக இருந்த போது நானும் என்னுடைய குடும்பத்தினரும் அவரோடு நெருங்கிப் பழகினோம். அது மட்டுமல்ல, கொழும்பில் மிகவும் பிரபலமாக அமைந்திருக்கின்ற ஜாமிஉல் அழ்ஹர் (சம்மான்கோட்டைப்பள்ளிவாசல்) தலைவராக இருந்து அவர் ஆற்றிய பணி சீரும் சிறப்பும் மிக்கது. அந்தப் பள்ளிவாசலை அமைப்பதில் ஆரம்பத்தில் இப்போதுள்ள நிலையில் அந்தக் கட்டிடங்களை அழுகுற கட்டித் தந்தவரும் லெப்பை சாஹிப் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
ஷைகுல் பலாஹ், என்றும் சாந்தி சமயத்தைதான் போதித்தார். மனித நேயம் மக்கள் நல்வாழ்வுக்காக வேண்டி உழைத்தார். நல்ல தீர்ச்சன புத்தி உடையவர்.
எனவே திருக்குர்ஆன் வகுப்புக்களை காத்தமான் நகரிலே முதன் முதலாக ஆரம்பித்த பெருமை இவரையே சாரும். எனவே இவரை இழந்து தவிர்க்கும் இவருடைய குடும்பத்தவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் கூறிக் கொண்டு, வல்ல அல்லாஹ் மறைந்த அப்துல்லாஹ் ரஹ்மானி ஹஸரத்துக்கு உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக! என்றும் பிரார்த்திக்கின்றேன்.

