ஆட்சியில் சிறுபான்மையினரின் பகிபாகத்தை இல்லாதொழிக்க இரு பெரும் தேசியக் கட்சிகளும் தீவிரம்; ஹரீஸ் குற்றச்சாட்டு

Written By avathani Media Network on Sunday, October 16, 2016


(அஸ்லம் எஸ்.மௌலானா)

இந்த நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக சிறுபான்மைச் சமூகங்கள் இருக்கக் கூடாது என்பதை இலக்காகக் கொண்டு, தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வதற்கு இரு பெரும் தேசியக் கட்சிகளும் தீவிர போக்குடன் செயற்பட்டு வருகின்றன என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

சர்வஜன வாக்கெடுப்பின்றியே புதிய அரசில் யாப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

கல்முனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெளிவாரி பட்டதாரிகளை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனை வெளிவாரி கற்கைகள் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான இசட்.எம்.நதீர் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில்;

"எமது நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மேலும் பலப்படுத்தி, நல்ல விடயங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் அரசியல் யாப்பை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இருந்தபோதிலும் அதில் முக்கிய அம்சமாக இருக்கின்ற தேர்தல் முறை மாற்றம் என்பது தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு பெரும் பாதிப்பாக அமையலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை காலமும் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆட்சியின் பங்காளிகளாக சிறுபான்மையினர் இருந்து வருகின்ற நிலையில், தேசிய அரசியலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக சிறுபான்மை கட்சிகள் கொண்டிருக்கின்ற வகிபாகத்தை இல்லாமல் செய்து, அந்த சிறுபான்மையினரின் தயவின்றி ஆட்சியமைவதற்கான தேர்தல் முறையை தெற்கிலுள்ள சில சக்திகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிறுபான்மைக் கட்சிகளின் பங்களிப்பின்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கான கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு இரு பெரும் தேசியக் கட்சிகளும் காய்களை நகர்த்தி வருகின்றன. அதன்படி சிறுபான்மை சமூகங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை வெகுவாகக் குறைப்பதற்கான எத்தனிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போதுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைக்குப் பதிலாக ஜேர்மன் நாட்டை போன்று கலப்பு தேர்தல் முறையைக் கொண்டு வருவதற்கு தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. அரசியலமைப்புக்குழுவுக்கு தலைமை வகிக்கின்ற சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்னவின் கூற்றுப்படி 140 தொகுதிகள் வரையறுக்கப்பட்டு, 233 எம்.பி.க்களை தேசிய, மாகாண, மாவட்ட ரீதியாக தெரிவு செய்வதற்கான ஒரு தேர்தல் முறை பற்றி ஆராயப்படுவதாக அறிய முடிகிறது. இது சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்தல் முறைமை என்று கூறப்படுகிறது. 

அதேவேளை புதிதாக தயாரிக்கப்படுகின்ற அரசியல் யாப்புக்கு மக்களின் அங்கீகாரத்தை பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று முன்னர் சொல்லப்பட்ட போதிலும் இப்போது அந்த நிலைப்பாட்டை மாற்றி, சர்வஜன வாக்கெடுப்பில்லாமல் நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் மாத்திரம் அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிய வருகிறது.

எமது சமூகத்திற்கு பாதகமான தேர்தல் முறையை உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படுமாயின் அதனை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணை போகமாட்டாது. இது விடயத்தில் எமது கட்சி உறுதியாக இருக்கின்றது. இது தொடர்பாக அரசாங்கத்துடனும் ஏனைய தரப்புகளுடனும் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.

சிவில் சமூக அமைப்புகளும் இது விடயத்தில் விழிப்பாக இருந்து, அரசியல் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்" என்றார்.



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.