மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் அத்துமீறல்களையும், சட்டபூர்வமற்ற ஆக்கிரமிப்பையும் கண்டித்து, ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோ சமீபத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
இதன்போது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கை நழுவியது கண்டனத்துக்குரியது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்து வந்த இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை ஏற்க முடியாது எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பலஸ்தீன ஆதரவுப் போக்கைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என தேசிய ஷூறா சபை கடந்த தேர்தலின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வேண்டிக் கொண்டது. அதனை அப்போது ஏற்றுக் கொண்டிருந்தார்.
ஆனால், மஸ்ஜிதுல் அக்ஸா விடயத்திலும் பலஸ்தீன விவகாரத்திலும், அரசாங்கம் எடுத்து வரும் பிழையான நிலைப்பாடுகள் கவலையளிப்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.
இந்தத் தவறுகளை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என, அரசாங்கத்தையும் வெளிவிவகார அமைச்சையும் அது வேண்டிக்கொள்கிறது.
முற்றும்

