5வது நாடாக சார்க் மாநாட்டை புறக்கணித்தது மாலைதீவு

Written By avathani Media Network on Sunday, October 2, 2016


இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய எட்டு நாடுகள் அங்கம் வகிக்கும் ‘சார்க்’ அமைப்பின் உச்சி மாநாட்டை அடுத்த மாதம் (நவம்பர்) பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், காஷ்மீரில் உரி இராணுவ முகாம் மீது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்தது. இந்தியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான் ஆகிய நாடுகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. 

இதன்படி சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக நேற்றுமுன்தினம் இலங்கையும் குறிப்பிட்டது. 

இதனால் 19வது சார்க் மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மீண்டும் சார்க் மாநாடு நடப்பதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சார்பில் தெரியப்படுத்தப்பட்டது. 

இதேவேளை, 4 நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணித்ததை தொடர்ந்து தற்போது 5 வது நாடாக மாலைதீவும் சார்க் மாநாட்டை புறக்கணித்தது. அந்த நாடு சார்பில் சர்வதேச பயங்கரவாதத்துக்கு மாலத்தீவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சார்க் நாடுகள் அமைப்பின் 19-வது உச்சி மாநாட்டுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குமாறு உறுப்புநாடுகளை அந்த நாடு கேட்டுக்கொண்டுள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.