(NFGG ஊடகப் பிரிவு)
காத்தான்குடி- பாலமுனை CIG வீட்டுத்திட்ட பிரதேசத்திற்கான வீதி அமைக்கும் பணிகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் கடந்த 4.9.2016 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், காத்தான்குடி பிரதேச தலைமைத்துவ ஆலோசனை சபை உறுப்பினர்களான MM. அமீர் அலி ஆசிரியர்,மற்றும் UL றபீக் உட்பட பாலமுனை பிரதேச செயற்குழு உறுப்பினர்களான சியாட் மற்றும் பாலமுனை பிரமுகர்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
பாலமுனைப்பகுதியில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றான CIG வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாதை, மண்பாதையாக நீண்ட காலமாக காணப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்னர் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்தபோது அப்பகுதியின் முதன்மைத் தேவையான இம்மண்பாதையினை குறைந்த பட்சம் கிறவல் இட்டு போக்குவரத்துக்கேற்ற பாதையாக அமைத்துத்தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.இதனை முடியுமான அளவு விரைவாக தமது சொந்த நிதியிலிருந்து செய்து தருவதாக பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
இதற்கமைய 175 மீற்றர் நீளமான இப்பாதையினை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. மூன்றரை இலட்ச ரூபாய் அளவில் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள இப்பாதை அமைப்பு வேலைத்திட்டமனது NFGGயின் சொந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இவ்வேலைத்திட்டமானது இன்னும் இரண்டு வார காலத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக இவ்வீதி கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








