முஸ்லிம்களை தமிழர்களாக சித்தரிக்க முனையும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்தை ஏற்க முடியாது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

Written By avathani Media Network on Thursday, September 29, 2016



வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், சமீபத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியிட்டுள்ள கருத்து, அடிப்படையில் மிகவும் தவறானது. மொழி ரீதியாக முஸ்லிம்களையும் தமிழர்களையும் ஒரு இனமாக சித்தரிக்க முனைவது, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித்துவத்தை நிராகரிக்கும் ஒரு நிலைக்கு இட்டுச் சென்று விடும்.


"முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக தமது வடிவம் மதம் சார்ந்தது என்றும் அது மொழி சார்ந்தது அல்ல என்றும் கூறி வருகின்றனர். கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசி, எழுதி, கற்று வருகின்றதனால் முஸ்லிம்களின் கலை வடிவமும் மொழி சார்ந்தது என்று கூறத் தோன்றுகின்றது."

"மொழியைப் பேசுவதற்குக் கற்றுக் கொண்ட பின்னர் தான் நாம் மதத்தை அறிந்து கொண்டோம். இந் நிலையில் முஸ்லிம் சகோதரர்களும் அடிப்படையில் தமிழ் மொழி சார்பானவர்களேதான். தமிழ் இனத்தை இனிமேல் ஒன்றிணைக்கப் போவது அரசியல் அல்ல மொழிதான்” இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் இந்தக் காலகட்டத்தில் இவ்வாறான பொறுப்புணர்ச்சியற்ற கருத்துக்களை வெளியிடுவது அபாயகரமானது. தமிழ்- முஸ்லிம் சமூகங்களிடையே, சந்தேகத்தையும் கசப்புணர்வையும்
வளர்க்க இது பங்களித்து விடுமாயின், அது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.

நிலைமாறு காலகட்ட நீதி, மீளிணக்கம் பற்றி நாடு கவனம் செலுத்தும் இந்தக் கால சூழலில், பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கும் கருத்துக்களே முன்வைக்கப்பட வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேலும் கருத்து வெளியிட்டுள்ளது
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.