இனப்பிரச்சினையை ஏற்படுத்த முனையும் தீய சக்திகளுக்கு இடமளிக்கப் போவதில்லை; - அமைச்சர் எம். ஏச். ஏ. ஹலீம்

Written By avathani Media Network on Saturday, September 17, 2016

(இக்பால் அலி)

கல்ஹின்னையில் இடம்பெற்ற சம்பவம் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற சம்பவமாகும். இதனை இனவாதப் பிரச்சினையாக மாற்ற சில தீய சக்திகள் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சுமூகமான ஏற்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கும் மத்திய மாகாண பொலிஸ் பிரதி மா அதிபருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். ஏச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

கல்ஹின்னையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றுள்ள முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். ஏச். ஏ. ஹலீம் அங்கு இருந்து விடுத்துள்ள செய்தியில் இவ்வாறு இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

இந்த சம்பவம் தொடர்பாக எனக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து உடனுக்குடன் அங்கும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பினை ஏற்படுத்தி நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும்படி அடிக்கடி வலியுத்தியுள்ளேன். பெபிலிகொல்ல பள்ளிவாசல் மீதும் சில வீடுகள் மீதும் கல்லெறிந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவரை உடன் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அத்துடன் சம்மந்தப்பட்ட இடத்திற்கு இன்று மத்திய மாகாண பொலிஸ் மா அதிபரை அனுப்பி இரு சிவில் குழுக்களுக்கிடையே பரஸ்பர நல்லெண்ணப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு ஒற்றுமையை ஏற்படுத்துமாறு நடவடிக்கை மேற் கொண்டுள்ளேன். எமது அமைச்சின் ஊடகப் பிரிவு செயலாளர் ரஸியின் மூலம் தகவல்களைப் பெற்று தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.