மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கு நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண்கள் இருவரும் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலங்களாக மீட்கப்பட்ட பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்கு, உடற்பாகங்கள் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று இரண்டு பெண்களின் சடலங்களும் புதைக்கப்பட்டுள்ளன.
ஏறாவூர் முஹாந்திரம் வீதி பகுதியில் கடந்த பத்தாம் திகதி வீடொன்றிலிருந்து இரண்டு பெண்களின் சடலங்களும் மீட்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

