கிழக்கு மக்களின் கருத்தறியும் அமர்வுகள் நிறைவு

Written By avathani Media Network on Monday, August 29, 2016


இலங்கையில் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் கிழக்கு மாகாண மக்கள் கருத்துக்களை பெறுவதற்கான அமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. 

இம் மாதம் 9ம் திகதி முதல் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் 17 அமர்வுகள் நடைபெற்றுள்ளன. 

இந்த அமர்வுகளில் தனி நபர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என சுமார் 3000 பேரின் கருத்துக்கள் வாய் மூலமும் எழுத்து மூலமும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

பிரதேச ரீதியாக நடைபெற்ற இந்த அமர்வுகளின் போது குறிப்பாக ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, படுகொலை, காணி உரிமை மறுப்பு மற்றும் இழப்பீடுகள் வழங்காமை போன்ற விடயங்கள் தொடர்பாகவே அநேகமானோர் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஞாயிற்றுக்கிழமை இறுதி நாள் அமர்வுகள் சம்மாந்துறை மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் நடைபெற்றன. 

திருகோணமலை நகரில் நடைபெற்ற அமர்வின் போது குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் அங்கு முன்வைக்கப்பட்டன. 

இந்த அலுவலகம் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்பு தான் இந்த அமர்வில் அது பற்றி கருத்துக்கள் பெறப்படுவதாக அது பற்றிய கருத்தை முன்வைத்த பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது. 

´´இந்த அலுவலகம் மூலம் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நன்மை கிடைக்காது" என்ற கருத்தை அங்கு முன்வைத்த மனித உரிமை செயற்பாட்டாளரான அருள் தந்தை யோகேஸ்வரன் ´´சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன் வைக்கும் முன்னதாக மக்களிடம் கருத்துக்கள் பெற்றிருக்க வேண்டும்" என்றார். 

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயல்பாடுகள் கால அட்டவனை ஒன்றை கொண்டதாக இருக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் ரி. தவசிலிங்கம் தெரிவித்திருக்கின்றார். 

´´அலுவலகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்படும் போது அது பற்றிய விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான பதில் 3 - 6 மாத காலத்திற்குள் கிடைப்பதாக அந்த அட்டவனை அமைய வேண்டும்´´ என்ற யோசனையையும் உள்ளடக்கியதாக அவரது கருத்து அமைந்திருந்தது. 

(பிபிசி)
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.