உலகின் மிகப்பெரிய, 34 கிலோ எடை கொண்ட இராட்சத முத்து பிலிப்பைன்ஸின் மீனவர் ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்துள்ளது.
100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புமிக்கது என கூறப்படும் இந்த முத்தினை, தனது வீட்டில் படுக்கையின் அடியில் வைத்துப் பாதுகாத்து வந்துள்ளார் குறித்த மீனவர்.
மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தனது படகில் தட்டுப்பட்ட இந்த முத்தினை அவர் ஒரு அதிர்ஷ்டக் கல்லாக நினைத்து வீட்டில் வைத்திருந்துள்ளாரே தவிர, அதன் பெறுமதியை அவர் அறிந்திருக்கவில்லை.
பிலிப்பைன்ஸின் பியூர்ட்டோ பிரின்சஸா எனும் பகுதியில் வசித்து வந்த இந்த மீனவர், வேறொரு பகுதிக்கு தனது இருப்பிடத்தை மாற்ற நேர்ந்த போது, முத்தினை உறவினர் ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
அந்த உறவினர் உள்ளூரில் சுற்றுலாத்துறை அலுவலராகப் பணியாற்றி வருகின்றார். அவர் இந்த முத்தின் பெறுமதியை உணர்ந்து, மீனவரின் அனுமதியுடன், அப்பகுதி மேயரிடம் ஒப்படைத்துள்ளார்.
6.4 கிலோ எடை கொண்ட ஒரு முத்துதான் தற்போது உலகின் மிகப்பெரிய முத்தாக இருந்து வருகிறது.
இந்நிலையில், 34 கிலோ எடை கொண்ட இந்த முத்தின் பெறுமதி முறையாகக் கணக்கிடப்பட்டவுடன், உலகின் மிகப் பெரிய, மதிப்புமிக்க முத்தாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது

