(பைஸர் அமான்)
இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் பெற்றோருக்கான 'உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்குகள்' BCAS மட்டக்களப்பு வளாகத்தினால் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் 14ம் தேதிகளில் முறையே மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் நடாத்தப்பட்டது.
இவ்வருடம் க.பொ.த. உயர்தரம் எழுதும் மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்ட இப்பெறுமதியான கருத்தரங்கில் வளவாளர்களாக
• பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரும் தற்போதைய BCAS உயர் கல்வி நிறுவனத்தின் பீடாதிபதியுமான பேராசிரியை ஷாணிகா ஹிரிம்புரிகம அவர்களும்,
• தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவ பீட பீடாதிபதியான கலாநிதி S. குணபாலன் அவர்களும்,
• பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ALM மஹ்ரூப் அவர்களும் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் BCAS Campus இன் தலைவர் பொறியிலாளர் அப்துர் ரகுமான் அவர்களும் கலந்து கொண்டு பல உயர்கல்வி ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
BCAS Campus ஒரு தனியார் உயர்கல்வி நிறுவனமாக இருந்தும் கூட அரச பல்கலைக்கழக வாய்ப்புக்களுக்கு பெற்றோர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற செய்தியை அந்த நிகழ்வில் ஆணித்தரமாக பதிவு செய்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
அத்தோடு ஆங்கிலம் மற்றும் கணணித்துறையில் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலமாகத்தான் பட்டதாரியாக இருந்தாலும் கூட எதிர்கால தொழில் வாய்ப்புக்களை மாணவர்கள் உறுதி செய்ய முடியும் எனவும் வளவாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(தகவலும் படமும் - பைஸர் அமான்)
