A/L பரீட்சை எழுதிய மாணவர்களின் பெற்றோருக்கு BCAS வழிகாட்டல் கருத்தரங்கு!

Written By avathani Media Network on Friday, August 26, 2016


(அஸ்லம் எஸ்.மௌலானா) 

இம்முறை ஜீ.சி.ஈ.உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களின் உயர்கல்வி தொடர்பில் பெற்றோர்களை விழிப்புணர்வூட்டும் வழிகாட்டல் கருத்தரங்கு அண்மையில் BCAS கல்முனை கெம்பஸில் நடைபெற்றது.

நிலைய முகாமையாளர் உவைஸ் மொஹிதீன் பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக, முகாமைத்துவ பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.குணபாலன், விரிவுரையாளர் ஜுபைலா பேகம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தமது பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் பெற்றோர்கள் கூடிய கரிசனை செலுத்த வேண்டும் என தமது உரையின்போது வலியுறுத்திய அவர்கள், அதற்காக எத்தகைய தியாகங்களை செய்வதற்கும் சவால்கள் அனைத்தையும் வெற்றி கொள்வதற்கும் பெற்றோர்கள் தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

ஒரு பிள்ளையின் முன்னேற்றத்திற்கு பெற்றோரின் ஊக்கமும் வழிகாட்டலும் ஒத்துழைப்பும் இன்றியமையாத காரணிகளாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பிள்ளைகளின் உயர் கல்விக்காக பெற்றோர்கள் செலவிடும் பொருளாதாரம் ஒருபோதும் நஷ்டத்தைக் கொண்டு வராது எனவும் பல்கலைக்கழக வாய்ப்பை தவற விட்ட மாணவர்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று, தேசிய, சர்வதேச தொழிற்சந்தையில் போட்டியிட்டு மிகப்பெரும் பதவிகளை அடைந்து கொள்ள முடிகிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இத்தகையதொரு பாரிய பணியை பீகாஸ் செய்து வருகிறது எனவும் இளைய தலைமுறையினரை நவீன உலக சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில்தயார்படுத்துவதில் பீகாஸ் பாரிய பங்களிப்பை செய்து வருகிறது எனவும் பெரும் பணச்செலவுடன் கொழும்பு சென்று கற்க வேண்டிய பல முக்கிய உயர்கல்வி பாட நெறிகளை இந்நிறுவனம் தற்போது நமது காலடியிலேயே கொண்டு வந்திருக்கிறது எனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக, முகாமைத்துவ பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.குணபாலன் சுட்டிக்காட்டினார். 

இந்நிகழ்வில் பீகாஸ் உயர் கல்வி நிறுவனத்தின் ஆலோசகர் சுஹைர் காரியப்பர் மற்றும் விரிவுரையாளர்கள் சிலரும் பங்கேற்றிருந்ததுடன் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.