கல்முனை ஷாஹிறா கல்லூரி நிகழ்வில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதி! - படங்கள்

Written By avathani Media Network on Thursday, July 28, 2016


கல்முனை ஷாஹிறா கல்லூரி நடாத்திய தொழில் நுட்ப தின நிகழ்வில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கல்லூரியின் அதிபர் பதுர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு நேற்று (27.07.2016) கல்முனை சாஹிறா கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக ஆசிய மன்ற இணைப்பாளர் றிசாத் சரீப் அவர்களும் பல்வைத்திய நிபுணர் வைத்தியர் பாசில் வாரித் அவர்களும் கலந்து கொண்டனர்.


சாஹிறா கல்லூரியின் தொழில் நுட்பப் பிரிவில் பயின்று கடந்த வருடம் பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களைப் பாராட்டுமுகமாகவும் அதேபோன்று இவ்வருடம் உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை வாழ்த்தி வழியனுப்புமுகமாகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.


பாடசாலையின் தொழில் நுட்பத்துறையின் தலைவர் ஆதம்பாவா அவர்களின் வழிகாட்டுதலிலும் மேற்பார்வையிலும் நடந்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த BCAS Campus உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் விசேட உரையொன்றை இந்நிகழ்வில் ஆற்றினார். பிரயோகக் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் கல்வியின் முழுமையான நோக்கத்தை அடைந்து கொள்ளும் பொருட்டு மாணவர்கள் தம்மை எவ்வாறு மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பல முக்கிய ஆர்வமூட்டும் ஆலோசனைகள் அடங்கிய உரையாக அப்துர் ரஹ்மானின் உரை அமைந்திருந்தது.


இப்பாடசாலையின் தொழில் நுட்பத் துறையில் கல்விகற்கும் மாணவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட புதுமைகள் மற்றும் புதிய கண்டு பிடிப்புக்கள் ஆகியவற்றுக்கும் இந்நிகழ்வின்போது பாராட்டுக்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அத்தோடு கடந்த வருடம் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இதன்போது பாராட்டப்பட்டனர்.


இந்நிகழ்வின் இறுதியாக பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுப்படிகமும் பாடசாலை நிர்வாகத்தினரால் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் மற்றும் ஏனைய கொளரவ அதிதிகளும் இந்நிகழ்வில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.


























Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.