ACMC இல் இணைகிறார் தொழிலதிபர் ஹிபத்துல் கரீம்!

Written By avathani Media Network on Thursday, July 28, 2016




முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் ரிஸ்வி
சின்னலெப்பையின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஹிபத்துல் கரீம், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் இருந்து விலகி, அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இனைந்து கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.


இன்று வியாழக்கிழமை வர்த்தக கைத்தொழில் அமைச்சில் இடம்பெறவுள்ள நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் முன்னிலையில் அவர் அக்கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவுள்ளார்.


அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் விடுத்த அழைப்பையேற்று சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு பலம் சேர்ப்பதற்கே தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இனைந்து கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் ரிஸ்வி சின்னலெப்பையின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியபோது சாய்ந்தமருத்துக்கு தனியான பிரதேச செயலகத்தை உருவாக்குவதில் இவர் பெரும் பங்காற்றியுள்ளார்.


கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலின்போது ஏ.எம்.ஜெமீல், முன்னாள் மேயர் சிராஸ் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் பங்கேற்றிருந்ததால் சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு ரவூப் ஹக்கீமினால் ஹிபத்துல் கரீம், கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டு, தேர்தல் பிரசார பணிகளில் களமிறக்கப்பட்டிருந்தார்.


தற்போது சிராஸ் மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் இணையவுள்ளார் என்று கூறப்படுகின்ற சூழ்நிலையில் அவரது வட்டாரத்தை சேர்ந்த ஹிபத்துல் கரீம் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.