சூனியம் தொடர்பான நிலைப்பாடு ரமழானின் பின்னர் அறிவிக்கப்படும். -தேசிய தௌஹீத் ஜமாஅத், காத்தான்குடி-

Written By avathani Media Network on Tuesday, June 21, 2016


நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதாக இடம்பெறக்கூடிய ஹதீஸ்கள் மற்றும் அல் குர்ஆனுக்கு முரண்படக்கூடிய ஸஹீஹான அறிவிப்புக்கள் தொடர்பான தமது மீளாய்வின் இறுதிக்கட்ட நிலைப்பாட்டினை ரமழான் மாதம் முடிந்ததன் பிற்பாடு வெளியிடுவதாக தேசிய தௌஹீத் ஜமாஅத் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இன்றையதினம் (21:06:2016) தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளரும் முதன்மை பிரச்சாரகருமான மதிப்புக்குரிய மௌலவி அல் ஹாபிழ் MCM. ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது,

"சூனியம் மற்றும் மறுக்கப்படும் ஸஹீஹான நபிமொழிகள் தொடர்பான மீளாய்வினை கடந்த மூன்று வருடங்களில் பலகட்டங்களாக நாம் மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் எட்டப்படுகின்ற முடிவினை பொதுமக்களுக்கு குழப்பமின்றி அறிவிக்கவேண்டிய அதேநேரம் மாற்றுக்கருத்துள்ள யார் இதை விமர்சித்தாலும், கேள்வி எழுப்பினாலும், நேரடி விவாதமே மேற்கொள்ள முன்வந்தாலும் கூட அவற்றுக்கும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதற்காக மிகவும் நுணுக்கமாகவும், தெளிவாகவும், விரிவாகவும் நாம் ஆய்வுகளை நடாத்தி தற்போது இறைவனின் உதவியால் இறுதி முடிவை எட்டியுள்ளோம். இன்ஷா அழ்ழாஹ் அம்முடிவை இந்த (2016) ரமழான் மாதம் முடிவுற்றதும் கால தாமதமின்றி நாம் மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக வெளியிடுவோம்." எனத்தெரிவித்தார்.

வரலாற்றுப்பார்வை (சுருக்கமாக)
""""""""""""""""""""""""""""""
தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உலமாக்கள் சுமார் எழு வருடங்களுக்கு முன்னர் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பில் பிரச்சாரகர்களாக பணியாற்றியபோது சூனியம் என்றொரு கலையும் அதற்கான யதார்த்தமும் இருக்கிறது என்பதோடு ஸஹீஹான எந்தவொரு அறிவிப்பும் அல் குர்ஆனுக்கு முரண்படாது என்னும் நிலைப்பாட்டிலும் தங்களுடைய பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார்கள்.

எனினும் 2009ம் ஆண்டு தாருல் அதர் நிருவாகிகள் மற்றும் அதில் அக்காலப்பகுதியில் பணியாற்றி தற்போது தஃவா களத்தில் காலாவதியாகி, காணாமல் போயுள்ள சில உலமாக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் தற்போதைய தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உலமாக்களும் பல உறுப்பினர்களும் தாருல் அதரை விட்டும் விலகிச்சென்று தனியானதொரு தஃவா அமைப்பின் மூலமாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

அதபின்னர் மௌலவி ஸஹ்றான் தரப்பினால் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்னும் பெயரில் ஆரம்பிக்கபபட்ட தற்போதைய தஃவா அமைப்பு சுமார் 2010ம் ஆண்டின் நடுப்பகுதியில் சூனியம் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்கள் அல் குர்ஆனுக்கு முரண்படுவது குறித்த மாற்று நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தது.

எனினும் இந்த அறிவிப்பை மிகவும் மும்முரமாகவும் முகியத்துவமளித்தும் பிரச்சாரம் செய்துவந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து அப்பிரச்சாரத்தை உத்தியோகபூர்வமான எதுவித முன்னறிவிப்புக்களும் இன்றி இடைநிறுத்திக்கொண்டது.

இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக காத்தான்குடி வாழ் ஏகத்துவ சமூகத்தின் மத்தியில் பாரியளவிலான கேள்விகளும் குழப்பங்களும் விமர்சனங்களும் தோற்றம் பெறவே குறித்த விடயம் தொடர்பில் தாம் மீளாய்வு செய்வதாக தேசிய தௌஹீத் ஜமாஅத் அறிவித்தது.

இதன் ஒரு அங்கமாக காத்தான்குடி வாழ் ஏகத்துவ சமூகத்தின் சார்பில் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி எனது உத்தியோகபூர்வ இணையத்தளமான srilankanmuslim.wordpress.com இணையத்தளத்திலும் வாரஉரைகல் பத்திரிகையிலும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தினுடைய முதன்மை பிரச்சாரகரான மௌலவி MCM. ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்களை விழித்து பகிரங்க மடல் ஒன்றையும் எழுதி வெளியிட்டிருந்தேன்.

இதுவரைக்கும் அக்கடிதத்திற்கு உத்தியோகபூர்வமாக தே. த. ஜ விடமிருந்து எதுவித பதில்களும் வெளியிடப்படாத இந்நிலையில் தற்போது ரமழான் மாதம் முடிவுற்றதும் தமது மீளாய்வின் இறுதி முடிவை அறிவிப்பதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே சுமார் நான்கு வருடங்களுக்கும் மேலாக காத்தான்குடி வாழ் ஏகத்துவ சமூகத்தின் மத்தியில் மாத்திரமல்லாது தேசிய மட்டத்தில் கூட பேசு பொருளாகவும் கேள்விக்குறியாகவும் உருவாக்கம் பெற்றுள்ள குறித்த விவகாரம் தேசிய தௌஹீத் ஜமாஅத் தற்போது பகிரங்கமாக அறிவிக்கவுள்ள நிலைப்பாட்டினை தொடர்ந்து ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

-முஹம்மது நியாஸ்-
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.