காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் இரண்டாவது வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவர் கலை நிகழ்வும் கடந்த 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 05.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இவ்வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்குமான மத்திய நிலையத்தின் தலைவரும் மீள்பார்வை பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான சகோதரர் சிராஜ் மஷ்ஹுர் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் (நளீமி) சிரேஷ்ட எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் மௌலவி எம்.ஐ அப்துல் கபூர் (மதனி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அத்தோடு விசேட அதிதிகளாக காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எச். பிர்தௌஸ், மீராபாலிகா மகாவித்தியாலய அதிபர் எம்.ஏ.சீ.எம் சத்தார், அல்அமீன் வித்தியாலய அதிபர் எம்.எம். கலாவுதீன், மெத்தைப் பள்ளி வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கடந்த ரமழான் மாதத்தில் இடம்பெற்ற பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய், ஒழுக்க ரீதியாக முதன்மை நிலை வகிக்கின்ற, பாடசாலை மற்றும் ஷரீஆப் பாடங்களில் கூடிய புள்ளிகளைப் பெற்ற, அதிகூடிய நாட்கள் வருகை தந்த, அல்குர்ஆன் மனனத்தில் முதன்மை நிலை வகிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு அதிதிகளினால் நினைவுச் சின்னங்களும் , சான்றிதழ்களும் , பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை மாணவ மாணவிகளின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் கிறாஅத், தேசிய கீதம், பாடசாலை கீதம், ஆங்கிலப் பாடல், தமிழ் பாடல் , சிங்களப் பாடல், பேச்சு, பிஸ்மி செய்திகள், கஸீதா, பட்டிமன்றம், நாடகம், சமாதான மாநாடு, அறபு உரையாடல் போன்ற பல்வேறு விதமான நான்கு மொழிகளில் அமைந்த கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிஸ்மி குழுமத்தின் பணிப்பாளர்கள், நிர்வாகசபை உறுப்பினர்கள், பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலையின் ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் உட்பட நலன்விரும்பிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.











