( எம்.ஷபீக் )
தமது பிள்ளைகள் மீது அதிகமான பாசம் வைத்து அவர்களின் நன்னிலைக்காகவே பெற்றோர் பாடுபடுகின்றனர்.
பிள்ளைகளின் ஒவ்வொரு வெற்றிகரமான நகர்வுகளின் போதும் அளவிலா ஆனந்தம் அடைகின்றனர். இது வரவேற்கத்தக்க விடயமாகும். அதே நேரம் பிள்ளைகளுக்காக பாடுபடும் ஆசிரியர்களை மதிக்கும் நல்ல பண்பாடு எம்
சமூகத்தில் மதிப்பழந்து வருகிறது.இவ்வாறான நிலை ஆரோக்கியமான எதிர் காலசந்ததியினருக்கு பொருத்தமானது அல்ல எனக்குறிப்பிட்டார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்கள்;.
2015 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வரலாற்றுச் சாதனைப் படைத்த மாணவர்களுக்கான பாராட்டுவிழா 11-04-2016 அன்று வவுனியா சின்னச் சிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார் கே. காதர் மஸ்தான் அவர்கள்.
இவ்விழாவில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் : கல்வி என்பது எமது குடும்பத்தினுடைய உயிர் மூச்சு எனவும் அதற்காக தங்களது சொந்த உழைப்பில் பெறுகின்ற வருமானத்தின் கூடுதலான அளவு தொகையினைச் செலவு செய்வதாகவும் தன்னுடைய பாராளுமன்ற ஊதியத்தைக்கூட ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக தனது சேவையானது அரசியல் பேதங்கள் கடந்து நிலைபேறான சமூக அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மக்களின் ஆணையைப் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதி என்ற வகையில் முழு நேர மக்கள் சேவையில் தன்னை அர்ப்பனித்துள்ளதாகவும் பாராளுமன்ற அமர்வு தவிர்ந்த எந்த நேரமும் தன்னை சந்திக்க முடியுமெனவும் குறிப்பிட்டார். இம்மாணவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டுமெனவும் இறைவனைப் பிராத்திப்பதாகக் கூறினார். அத்துடன் அம் மாணவர்களால் கற்பித்த ஆசிரியர்களுக்கான நினைவுச் சின்னங்களை வழங்கியதுடன் பாடசாலையில் கடமையாற்றிய முன்னாள் அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.





