ஒரு யுக புருஷர் எம்.எச். முஹம்மத் ! முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர்

Written By avathani Media Network on Wednesday, April 27, 2016


(தொகுப்பு - எம்.எஸ்.எம்.சாஹிர்)

ஒரு யுகத்துக்கு ஒரு மனிதர். அந்த யுகத்தில் பிறந்ததன் காரணமாக அந்த மனிதரும் ஒரு மாமனிதராகும். அவரால் அந்த யுகம் ஒளி வீசத் தொடங்கியது. அப்படியாக அந்த யுகத்தில் பிறந்த ஒரு மனிதருள், நல்ல மனிதருள் ஒரு பிரதானியை நாங்கள் இழந்து தவிர்க்கின்றோம்.

அல்- ஹாஜ் எம்.எச்.முஹம்மத். அந்தப் பெயரை அறியாத யாரும் அந்த நாட்டிலே இருக்க முடியாது. முஸ்லிம்கள் மாத்திரமன்றி சிங்களவர்களும் தமிழர்களும் கூட இவரை அறிந்து வைத்துள்ளார்கள். அது மாத்திரமல்ல சர்வதேச ரீதியில் புகழ் பெற்றவர். தன்னுடைய குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் பரந்த ரீதியல் நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது 

சேவையினைச் செய்திருக்கிறார். தேசிய ரீதியல் சேவை செய்து, அனைத்து மக்களையும் இணைத்து ஒரு புது யுகத்தினை இந்த நாட்டில் உருவாக்குவதற்காக வேண்டி நடு நிலமையோடு செயற்பட்டவர் அல்-ஹாஜ் எம்.எச். முஹம்மத் அவர்கள்.

இவரது தந்தை பிரபல வழக்கறிஞர் எம்.எம்.ஹனீபா. அவர் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருந்தவர். அவருடைய தந்தை நாகூர் மீரான் என்ற கப்பல் கம்பனியை உருவாக்கி செல்வத்தில் வளர்ந்தவர்கள். எம். எச். சிறுவயதில் வெஸ்லி கல்லூரிக்குத்தான் சென்றார். ஆரம்பத்தில் இடது சாரி இயக்கத்தோடு இணைந்து அவர் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்டு 1949 ஆம் ஆண்டு முதன் முதலாகச் தெரிவு செய்யப்பட்டார். கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்களான எஸ்.ஏ. விக்கிரமசிங்க, பீட்டர் கெனமன் ஆகியவர்களின் ஆதரவு அவர்களுக்கு அப்போது கிடைத்தது. 1965 ஆம் ஆண்டிலே மிகவும் பிரபலமான ஒர் இடது சாரி தேர்தல் தொகுதியாக விளங்கிய பொரளைத் தொகுதியிலே, லங்கா சமசமாஜக் கட்சியின் முக்கிய புள்ளியான விவியன் குணவர்தனவைத் தோற்கடித்து முதன் முதலாக பாராளுமன்றம் தெரிவானார். அப்போது டட்லி சேனாநாயக்கவுடைய அரசாங்கத்திலே அவர் தொழில், தொழில்வாய்ப்பு, வீடமைப்பு அமைச்சராகப் பணியேற்றார். அக்காலத்தில்தான் அல்-குர்ஆனை அருளிய 1400ஆவது ஆண்டு விழாவினைக் கொண்டாட வேண்டுமென உலக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் டாக்டர் இனாமுல்லாஹ்கான் சர்வதேச ரீதியில் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை பிரதமர் டட்லியிடம் சொல்ல எம்.எச். முஹம்மத் தலைமையிலே ஒரு தேசிய விழாக்குழு திருக்குர்ஆன் அருளப்பட்டு 1400ஆவது ஆண்டு நிறைவு விழா என்ற ரீதியிலே அது ஆரம்பம் செய்யப்பட்டது. அதன் தலைவராக அவரும் செயலாளராக நானும் செயற்பட்டேன்.

அவ்வேளையில்தான் இலங்கை முஸ்லிம்கள் வலாற்றில் முதன் முதலாக இளைஞர் முஸ்லிம் சமுதாயத்துக்கென உண்மையான தபால் தலை வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்த விழாவின் போதுதான் உலகத்தின் அரும்பெரும் தலைவர்களெல்லாம் இங்கு வரவழைக்கப்பட்டார்கள். ஓராண்டு காலமாக அந்த விழா முழு இலங்கையிலும் நடைபெற்றது. உலக முஸ்லிம் அமைப்பின் தலைவர் கலீலுர்ரஹ்மான் அன்சாரி இந்தியாவில் விவசாய நீர்ப்பாசன அமைச்சராக விளங்கிய பகுர்தீன் அலி அஹமட், பிற்காலத்தில் இந்தியாவில் ஜனாதிபதியானார். பாகிஸ்தான் முக்கிய அமைச்சர் எஸ்.எம்.ஜாபீர், ஐக்கிய அரபுக் குடியரசு அபுகாப் சமய விவகார அமைச்சர் காமில் அப்துல் அஸீஸ், தாய்லாந்து நாட்டின் மன்னனுடைய பிரதிநிதியாக உம்மு ஹபீபா பூமிநாரா

அதாவது தாய்லாந்து நாடு ஒரு பௌத்த நாடு. தாய்லாந்திலே இஸ்லாம் வளர்ந்து வருகின்ற அபூர்வமான காட்சிகளை நாம் அங்கு காணலாம். தாய்லாந்தின் தெற்கிலே பட்டாணி முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். அந்த நாட்டின் பிரதிநிதியாக பூமிநாரா இங்கு வந்தார். மற்றும் பிரபல காரி மார்களெல்லாம் அறபு நாடுகளிலிருந்து கொண்டு வந்தார். இப்படியாக அந்த விழாவுக்கு பிரமுகர்களை அழைத்து விழாவினை நடத்தினார். 

அல்- ஹாஜ் எம்.எச். முஹம்மத் தொழிலமைச்சராக இருக்கும் போது தொழிலாளர்களுக்காக வேண்டி ஒவ்வாரு துறையிலும் சம்பள நிர்ணய சபையை உருவாக்கினார். இதனை பாட்டாளி மக்கள் தினம், மே தினத்திலே நாம் கட்டாயம் நினைவு கூர வேண்டும். 

1963 ஆம் ஆண்டளவிலே “ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமி” மன்னர் பைஸல் புனித மக்கா நகரிலே உருவாக்கிய பொழுது இலங்கையில் ஆரம்ப உறுப்பினராக, ஸ்தாபக உறுப்பினராக முஹம்மத் ஹனீபா முஹம்மதை சவூதி அரசு தேர்ந்தெடுத்தது. இன்று வரையில் இறுதி மூச்சுவரை அதிலே பங்கு கொண்டு உழைத்தார். ராபிதாவின் மூலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு முதன் முதலாக பல உதவிகளை பெற்றுத் தருவதற்கு முன்னோடியாக நின்றார். இலங்கையில் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், அஹதியாப்பாடசாலைகள் போன்றவற்றுக்கு ஏராளமான பண உதவியைப் பெற்றுக் கொடுத்தார். ரியாத்தில் இருக்கின்ற இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் இஸ்மாயில் பின் அகீக் கலந்து, அல் -ஹாஜ் முஹம்மதின் இல்லத்தில் அந்த சவூதி பண நன்கொடைகளை வழங்கினார். எம்.எச். முஹம்மத் ராபிதாவிலிருந்து முதன் முதலில் அந்த நன்கொடையைப் பெற்றுக் கொடுத்தார்.

1977 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட பொழுது தனிப்பட்ட போக்குவரத்து சேவையை அல் - ஹாஜ் எம்.எச். முஹம்மத் ஆரம்பித்தார். இப்படியாக ஆரம்பம் என்று சொல்லக் கூடிய தேசியத்தை கட்டியெழுப்பக் கூடிய பணிகளுக்கு கால்கோளாக அல் - ஹாஜ் எம்.எச்.முஹம்மத் நின்றவர். ஈராக் ஈரான், லிபியா போன்ற நாடுகளிலே பல ஆர்ப்பாட்டங்கள், 

சர்ச்சைகளும், யுத்தங்களும் ஏற்பட்ட போது அதனை சமரசமாக தீர்த்து வைக்கக் கூடிய சர்வதேசக் குழுவிலே உறுப்பினராக நம் மன்னர் பைஸல் மற்றும் ஏனைய தலைவர்களுள் ஆசியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக எம்.எச். முஹம்மத் திகழ்ந்தார்.

அது மாத்திரமல்ல இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் மூலமாக இலங்கையின் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவ மாணவிகள் வருடா வருடம் சகாய நிதியை பெற்றுக் கொடுக்க வழி சமைத்தார். மாளிகாவத்தையிலே அமைந்திருக்கின்ற இஸ்லாமிய நிலையத்தின் மூலமாக அந்தப் பணியை சரிவர நிறைவேற்றினார். இலங்கை போகின்ற போக்கு ஒவ்வொரு இனத்தவர்களுடைய உணர்வுகளையும் அறிந்து சகல இனத்தவர்களும் ஒன்று சேர்ந்து இன ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய ஒரு இயக்கத்தை உருவாக்கி பௌத்த பிக்குகள், குருமார்கள் போன்ற ஏனையவர்களையும் அவர் அதில் இணைத்துக் கொண்டார். இறுதி வரையிலே அதன் சேவைகளை நாடுபூராகவும் கொண்டு செல்வதற்கு நல்ல ஒரு அபிலாஷையோடு அவர் செயல்பட்டார்.

பொரளை தொகுதியிலே ஒரு பகுதி வனாத்தமுல்ல. வனாத்தமுல்ல என்றால் ஏறிட்டும் யாரும் பார்க்க மாட்டார்கள். குண்டு வெடிக்கும் குண்டு வெடிக்கும் பொருட்களை உற்பத்தி செய்யக் கூடிய இடம் என்று சொல்வார்கள். ஆனால் பொரளைத் தொகுதியின் பிரதான இனத்தின் வாக்குகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல் - ஹாஜ் எம்.எச்.முஹம்மத் அந்தப் பூமியை ஒரு புனித பூமியாக மாற்றினார். கொழும்பு நகரோடு ஒத்த ஒரு இடமாக உருவாக்கினார். முதல் வீட்டுத் திட்டத்தை அமைத்துக் கொடுத்தார். ஆகவே இப்படியெல்லாம் பார்க்கும் போது எமக்காக சேவையாற்றக் கூடிய ஒரு தலைவனை நாங்கள் இழந்து தவிர்க்கின்றோம். 

1977 ஆம் ஆண்டிலே ஜே.ஆர். ஜயவர்தன அரசியல் நிறைவேற்றதிகாரம் கொண்ட மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட பொழுது வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு மக்களுடைய அபிப்பிராயத்தையும் பெறுவதற்காக வேண்டி 

சர்வஜன வாக்குகளைப் பெற்று அதனை நான் செய்வேன் எனச் சொன்ன போது, அந்த நேரத்திலே மிகவும் உறுதியான மனநிலையோடு எழுந்து நின்று அனைத்து முஸ்லிம்களுடைய நலனை நன்கு உணர்ந்து, “இப்படியான இணைப்புக்கு விரோதமாக நான்தான் முதல் ஆளாக நின்று பிரசாரம் மேற்கொள்வேன்” என்று கூறிய ஒரே ஒரு முஸ்லிம் தலைவர் அவர் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

இன்று முஸ்லிம் இயக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அந்த இயக்கங்களின் தலைவர்களோ எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். அவர்கள் எம்.எச் முஹம்மத் உடைய மதியுகத்தையும் தேசிய நோக்கம், அரசியல் பார்வையையும் நன்றாக உணர்ந்து செயற்பட்டால் இங்குள்ள சமுதாயத்தை நல்வழியில் நடத்தக்கூடிய அருமையான சூழ் நிலை இப்போதுள்ள முஸ்லிம் தலைமைகளுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதை நான் மிகவும் அழுத்தமாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன். 50 ஆண்டு காலமாக அவரோடு இருந்து 60 ஆண்டு காலமாக அரசியல் செய்த அனுபவத்தின் மூலமாக நான் சொல்லுகின்றேன்

அம்பாறையில் இயங்கிய இ.போ.ச டிப்போ , கல்வி அலுவலகம் தொழிற்திணைக்கள அலுவலகங்களை கல்முனையிலும் அமைப்பதற்கு அல்-ஹாஜ் முஹம்மத் தொழில் அமைச்சராக இருந்த போது நடவடிக்கை எடுத்தார். கல்முனைக்கு இ.போ.ச. அலுவலகத்தை கொண்டு வர நானும் மர்ஹும் மசூர் மௌலானாவும் அவருக்கு உறு துணையாக இருந்தோம். அன்னாரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, அன்னாருக்கு உயரிய சொர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கம் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.