(எம்.எச்.எம்.அன்வர்)
காத்தான்குடி பிரதேசம் குறைந்த நிலப்பரப்பில் கூடிய சன அடரத்தி மிக்க சுமார் 4.5 சதுர கிலோமீட்டர் அளவுள்ள ஒரு பிரதேசமாகும். இங்கு சுமார் 15000 குடும்பங்களில் 60000 மக்கள் வாழ்கின்றனர்; அதிகளவான துவிச்சக்கரவண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் மோட்டார் வாகனங்களும் நிறைந்த பிரதேசமே இப்பிரதேசம்.
இங்கு பிரதான வீதியான புதிய கல்முனை வீதியை அதிகளவில் பயன்படுத்தும் இப்பிரதேச மற்றும் ஏனைய பிரதேச பயணிகளும் இவ்வீதியை பயன்படுத்துவதால் அதிகளவான வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற அதேவேளை நாளாந்தம் ஏற்படும் இவ்வீதி விபத்துக்களால் மரணங்கள் மற்றும் பாரியகாயங்களும் ஏற்படுகின்றன
குறிப்பாக குர்ஆன் சதுக்கம் எனப்படும் குட்வின் சந்தி, பஸ்மலா சதுக்கம் எனப்படும் மீரா பாலிகா சந்தி, ஹிஸ்புல்லா மண்டபத்திற்கு முன்னாலுள்ள சந்தி, அந்நாஸர் வித்தியாலய சந்தி மற்றும் இரும்பு தைக்கா பள்ளிவாயல் சந்தி என்பன முக்கிய சந்திகளாகும்
இச்சந்திகளில் மோட்டார் பொக்குவரத்து பொலிசார் பாடசாலை நேரங்களில் மாத்திரமே அங்கு காணப்படுவதுடன் தொடராக நிற்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது
எனவே, மேற்படி சந்திகளில் கொழும்பு போன்ற இடங்களில் காணப்படும் தன்னியக்க சிக்னல்களை பொருத்தினால் மிகவும் பிரயோசனமாக இருக்கும் அதே வேளை அதிகளவான விபத்துக்களை தடுக்க முடியும் எனவும் பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது
இது விடயம் தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளருக்கு எழுத்து மூல கடிதம் ஒன்றினையும் அண்மையில் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது

