மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒள்ளிக்குளம் சமாதான கிராம மக்களுக்கு குடி நீர் வழங்குவதற்கான முதற்கட்ட வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த 11 வெள்ளிக்கிழமை மாலை சமாதான கிராம பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்றது.
நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் மட்டக்களப்பு பிராந்திய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் ஆரையம்பதி பிரதேச நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை என்பன இணைந்து மேற்கொண்டு வரும் மேற்படி திட்டத்தை நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம்.என்.முபீன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது ஒள்ளிக்குளம் சமாதான கிராம மக்களுக்கு குடி நீர் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தினுடைய குழாய் அதிதிகளினால் நிலத்தில் பதிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆரையம்பதி பிரதேச தேசிய நீர் வழங்கலழூ; வடிகாலமைப்பு சபை காரியாலய பிரதிப் பொறுப்பதிகாரி பொறியியலாளர் சமட் ,முன்னாள் ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினர் மதீன்,ஒள்ளிக்குளம் பாக்கியதுஸ் ஸாலிஹாத் ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் அனஸ் உட்பட ஊர் பிரமுகர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த சமாதான கிராமத்திற்கு நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் குடி நீர் வழங்கப்படுவதன் மூலம் அக் கிராமத்தில் வசிக்கும் சுமார் 70 குடும்பங்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமாதான கிராம மக்களுக்கு குடி நீர் வழங்குவதற்கான முதற்கட்ட வேலைத் திட்டம் சுமார் ஒரு வாரம் அல்லது இரண்டு வருட காலத்திற்குள் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
