வித்தியா படுகொலையில் திடீர் திருப்பம்….! மேலும் இருவர் அதிரடி கைது

Written By We Are Anonymous on Tuesday, March 1, 2016


புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக மேலும் இருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்த மாப்ளே என செல்லமாக அப்பகுதி மக்களால் அழைக்கப்படுபவரும், மற்றுமொருவரான சூரியின் மகன் என்வருமே கைதாகியுள்ளனர். இவ்விரு சந்தேக நபர்களின் கைது தொடர்பாக அவர்களது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர்களை கடந்த இரு தினங்களிற்கு முன்னர் கொழும்பில் இருந்து சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இக்கைது நடவடிக்கை குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது “இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒன்பது பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இறுதியாக தங்களால் 10 ஆவது சந்தேக நபரான பியவர்த்தன ராஜ்குமார் என்பவரே கைது செய்யப்பட்டார்.

எனினும் இவரது கைதுக்கு பின்னர் தாங்கள் எவரையும் இதுவரை கைது செய்யவில்லை” என குறிப்பிட்டனர்.

இதேவேளை தற்போது புதிதாக கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் கொழும்பிற்கு அழைத்து சென்று குற்றபபுலனாய்வு பிரிவினர் கடுமையாக விசாரணை செய்யப்படுகின்றது.

மேற்படி கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் கடந்த 2015 ஆண்டு மே மாதம் அளவில் புங்குடுதீவு பகுதியில் வைத்து பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.’ இப்படுகொலையை கண்டித்து நாடுபூராகவும் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டு வன்முறைகளும் இடம்பெற்றன.

இதன் பின்னர் 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் சுமார் 8 மாதங்களாக வழக்குகள் நடைபெற்று வந்தன.

இதன் போது பொலிஸார், குற்றப்புலனாய்வு பிரிவினரால் பல கொலை தொடர்பான சான்றுப்பொருட்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அவை பகுப்பாய்விற்காக குற்றப்புலனாய்வினர் ஊடாக குறித்த இடங்களிற்கு அனுப்பப்பட்டன.

இருந்த போதிலும் காலம் கடந்து சென்ற போதிலும் நீதவானிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டதே தவிர சான்றுப்பொருட்களுக்கான எவ்வித அறிக்கைகளின் முடிவு இதுவரை மன்றிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

தொடர்ந்தும் வழக்கு மன்றிற்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் புதிய நீதவான் எம்.எல் றியாழ் விசாரணையை மேற்கொண்டார்.

ஆரம்பத்தில் இவ்வழக்கிற்கு முகம் கொடுத்த குறித்த நீதவான் சற்று தடுமாறினாலும் கடந்த அமர்வில் குற்றப்பலனாய்வு பிரிவினரை கடும்தொனியில் எச்சரிக்கை செய்தார்.

அதாவது குற்றப்புலனாய்வினரை நோக்கி மன்றில் “ஆரம்பம் முதல் இதுவரை கோரப்பட்ட ஒன்பது அறிக்கை முடிவுகளும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக எமது மக்கள் அவதானித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். நாங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன..

எனவே எதிர்வரும் மன்றில் வழக்கு விசாரணை தொடர்பாக முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடில் உங்கள் மீது (குற்றப்புலனாய்வு) நடவடிக்கை எடுப்பேன்” என கூறினார்.

இவ்வாறான நிலையில் மேலும் இரு நபர்கள் சந்தேகத்தின் பெயரில் ஒன்பது மாதங்களிற்கு பின்னர் கைது செய்யப்பட்டமையானது பெரும் சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதவானின் எச்சரிக்கையின் காரணமாகவே அவர்கள் இருவரையும் கைது செய்தனர் என ஊர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.