சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்திய கர்நாடக பிரஜைகள் 12 பேர் -காத்தான்குடியில் பொலிசாரால் கைது- பெறுமதியான சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளும் மீட்பு-படங்கள்.

Written By avathani Media Network on Saturday, March 19, 2016

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்று 18 வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகைதந்து சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட 12 பேரும் இந்தியாவின் கர்நாடகாவில் இருந்து சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகைதந்தவர்கள் எனவும் இவர்களில் 40 வயதிற்கு மேற்பட்ட 5 பெண்களும்,7ஆண்களும் அடங்குகின்றனர் எனவும் கடந்த இரண்டு தினங்களாக இவர்கள் காத்தான்குடியில் தங்கி இருந்தாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.பீ.என்.நிஸாந்த தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகளிடமிருந்து இலேகியம் ,எண்ணெய்,தூள் உள்ளிட்ட பெறுமதியான சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்கர் ஆகியோரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதரவின் ஆலோசனையில் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த இந்திய பிரஜைகள் 12 பேரையும் இன்று 19 சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.