இக்ரா பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

Written By avathani Media Network on Tuesday, February 23, 2016

(MSM.நுஸ்ரி)
காத்தான்குடி இக்ரா பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான மாதாந்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் 2016ம் ஆண்டுக்கான இரண்டாவது விழிப்புணர்வுக் கருத்தரங்கு  கடந்த 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணி தொடக்கம் 06.௦௦ மணி வரை பிஸ்மி தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது ‘அதிகரித்து வரும் புற்று நோயும் காரணிகளும் ’ எனும் தலைப்பில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் எம்.எஸ்.எம். நுசைர் (MBBS) அவர்களால் பெண்களை மையப்படுத்திய ஒரு விரிவுரை  நிகழ்த்தப்பட்டது. அதில் குறிப்பாக பெண்களை பாதித்து வரும் மார்பகப் புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய் குறித்து காணொளிகள் புகைப்படங்கள் மூலமாக தெளிவு படுத்தினார். 

மேலும் ஆரம்பத்தில் புற்று நோயை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதன் மூலம் புற்று நோயை குணப்படுத்த முடியும் என்றும் எனினும் நமது பெண்கள் உரிய முறையில் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறாததினாலேயே மரணங்கள் சம்பவிப்பதாகவும் குறிப்பிட்டார். பொதுசுகாதார அலுவலகங்களுக்குச் சென்று உரிய பரிசோதனைகளை செய்வதன் மூலம் புற்று நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும் என்றும் தெரிவித்தார்.

இக் கருத்தரங்கில் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை, பிஸ்மி கிண்டர்கார்டன் மற்றும் பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலை ஆகியவற்றின் பெற்றோர்கள் பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தின் உறுப்பினர்கள் உட்பட இருநூறுக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.