முஸ்லிம் மக்களை அடமானம் வைத்து சில தீயசக்திகளின் சதிவலையில் எம்மை சிக்கச் செய்யும் செயற்பாடுகளில் எமது முஸ்லிம் தலைமைகள் செல்கிறதா? என மக்கள் மத்தியில் அச்சம் எழ ஆரம்பித்துள்ளது. தேர்தல் காலத்தில் மட்டும் கிழக்கு மாகாணத்திற்க்கு வந்து போகும் எமது அரசியல் வியாபாரிகள் கிழக்கை சிக்கலுக்கு ஆளாக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அல் -மீஸான் பௌண்டசன் தலைவருமான அல்-ஹாஜ் ஹுதா உமர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் பல சீர்திருத்தங்கள் வந்துள்ளது.அந்த தீர்வு திட்டங்களை விட இந்த திட்டங்கள் சிறந்ததாக அமையுமா? அதற்க்கு சகல தரப்பும் ஒத்துழைக்குமா? அதன் மூலம் சிறந்த தீர்வு கிடைக்குமா என நாங்கள் உற்றுநோக்கினால் அது கேள்விக்குறியே....
இன்று வடக்கும் கிழக்கும் பிரிந்திருப்பதனால்தான் நாம் நமது பூமியில் ஆளும்தரப்பாக, சக்திமிக்கவர்களா க, அரசியல் அதிகாரமிக்க மக்களாக நாம் வாழ முடிகிறது. இந்த சீரான வாழ்வை குழப்பி வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என சில கூலிக்கு மாரடிக்கும் தலைவர்களும்,அரசியல் அறிவாளிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒருபோதும் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகளை வழங்க வடகிழக்கின் பெருபான்மை இனத்தவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை இங்கு சுட்டிகாட்ட விரும்புகிறேன். அப்படியே அவர்கள் தருவார்கள், நாங்கள் ஒப்பந்தம் செய்வோம், அதன் மூலம் பெறுவோம் என வியாக்கியானம் பேசுகின்ற அரசியல் அறிவாளிகளுக்கு காலம் கசப்பான உண்மையை கூறும்.நீங்கள் வெறுமனே கற்பனை உலகில் வாழ்கின்றீர்கள் என்பதை இங்கு கூறிவைக்க விரும்புகிறேன்.
கடந்த காலங்களில் தமிழ் கூட்டமைப்பு கைவிரித்த சம்பவங்கள் அதிகமாக இருப்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். விடுதலை புலிகளின் ஆதிக்கம் முடிந்தும் கூட தமிழ் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு நன்மையாக ஒன்றும் செய்ததாக இல்லை.வடகிழக்கின் குடியேற்றம் முதல் கிழக்கின் காணிப்பிரச்சினை வரை இதற்க்கு உதாரணம் கூறலாம்.
அண்மையில் கல்முனை மாநகரின் அபிவிருத்திக்கு கூட உங்கள் கூட்டாளிகளான கூட்டமைப்பு எதிர்த்து நின்றதை மறக்க மாட்டிர்கள் என நம்புகிறேன். இப்படியான கூட்டமைப்பினரை நம்பி வடக்கையும் கிழக்கையும் இணைத்துவிட்டு தவறு செய்துவிட்டோம் என பின்னர் ஒப்பாரி வைப்பதில் பயனில்லை. இதன் மூலம் தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என நீங்கள் நம்பினால் அதுதான் உலகின் மிகப்பெரிய முட்டாள் தனம்.
கடந்த கால அனுபங்களை கருத்தில் கொள்ள வேண்டியது உங்களின் தார்மீக கடமை என்பதை மறந்து விடக்கூடாது. இப்போது இருப்பது போன்றே வடக்கையும் கிழக்கையும் வைத்து கொண்டு அதிகாரத்தை பரவலாக்கி சகல இன மக்களையும் ஒற்றுமையுடன் வாழும் அளவிற்க்கு சரியான சிந்தனையுடனும் நிதானத்துடனும் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும் என சகல முஸ்லிம் தலைவர்களையும் வேண்டி கொள்கிறேன். இதன் மூலம் தான் முஸ்லிம்களின் அபிலாசைகளையும்,உரிமைகளையும் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். என மேலும் தெரிவித்தார்.

