புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 9ஆம் இடத்தைப் பெற்ற மாணவனின் பரிதாப நிலை

Written By avathani Media Network on Sunday, February 21, 2016

கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 9ஆம் இடத்தைப் பெற்ற மாணவர் வாகன விபத்தினால் சுய நினைவிழந்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்ற எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியின் ஷசீன் கவிந்து நெத்மின உட்பட அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டுவதற்காக சப்ரகமுவ மாகாண சபையினால் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பங்கேற்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மாணவர் ஷசீன் கவிந்து உள்ளிட்ட சிலர் பயணித்த வேன், தனியார் பஸ்ஸொன்றுடன் மோதியது.

இந்த விபத்தின் போது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷசீன் கவிந்து நெத்மின, இரத்தினபுரி பொது வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்றதை அடுத்து குணமடைந்தார்.

எனினும், இந்த நிலை சில தினங்கள் மாத்திரமே நீடித்தது.

புலமைப்பரிசில் பரீட்சையில் பலவற்றை நினைவில் வைத்து 188 புள்ளிகளைப் பெற்ற ஷசீன் கவிந்து நெத்மினவுக்கு தற்போது எதுவும் நினைவில் இல்லை.

மாணவனின் தலையினுள் காயமேற்பட்டுள்ளமையால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று வளமான எதிர்காலத்திற்காக முதல் படியை எடுத்து வைத்த ஷசீன் கவிந்து நெத்மினவின் இந்த பரிதாப நிலையைக் குணப்படுத்துவதற்காகும் செலவைக் கூட ஈடு செய்ய முடியாமல் பெற்றோர் பரிதவிக்கின்றனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.